கால அட்டவணை

திங்கள், 24 மே, 2010

இந்த புலவரை உங்களுக்கு தெரியுமா?.

‘குலாம் காதிறு நாவலர்’

நாவலருக்கு பாவலரின் பாராட்டு

1896 – ஆம் ஆண்டு நாகூர் குலாம் காதிறு நாவலர் அவர்களின் “ஆரிபு நாயகம்” என்ற நூல் யாழ்ப்பாணத்தில் ‘நூல் வெளியீடு’ செய்யப்பட்டது. அந்நூலுக்கு வாழ்த்துரையை இலங்கை பொன்னம்பலம் பிள்ளை அவர்கள் வழங்கியிருந்தார்.


அந்த வாழ்த்துரை இதுதான் :

நாகூ ரென்னும் நகர வாசன்

பாகூ ருஞ்சொல் பயின்றிடு நேசன்

பற்பல விதமாப் பகர்பிர பந்தம்

பற்பல புராணம் பழுதறச் செய்தோன்

ஆசு மதுரமும் அருஞ்சித் திரமும்

மாசு மதுரமாய் அமைந்திட வல்லோன்

தொல்காப் பியமுதல் சூழிலக் கணமும்

தொல்காப் பியமும் சூழ்ந்தினி தாய்ந்தோன்

பாவலர்க் கினிய பகர்குலாம் காதிறு

நாவல னென்னும் நற்பெயர் கொண்டோன்

குலாம் காதிறு நாவலர்


நாவலர் நூல்கள் நாட்டுடமை

     புலமைத்திரு குலாம் காதிறு நாவலர் அவர்கள் நாகூரில் 1833 -ல் பிறந்தார். தந்தையார் பெயர் வாப்பு ராவுத்தர். நாவலரவர்கள் தமிழ், ஆங்கிலம், அரபு மொழிகளில் அறிவு நிரம்பியவர். இயற்றமிழ் ஆசிரியர் வே.நாராயணசாமி பிள்ளையவர்களிடமும், பின்னர் புலவர் ஏறு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடமும் தமிழ் கற்றார். மதுரையில் தமிழ்த்திரு பாண்டித்துரை தேவர் தமிழ்ச்சங்கம் அமைத்தபோது இவர் பணியையும் அவர் பெற்றார். மதுரை தமிழ்ச்சங்கப் புலவராற்றுப்படை என்னும் நூலை எழுதி சங்கத்திலேயே அரங்கேற்றினார். மலேயா, இலங்கை சென்று தமிழும் இஸ்லாமும் பரப்பினார். யாழ்பாணத்திலும் இவர்தம் நூலொன்று அரங்கேறியது. நாகையில் சிறந்த வணிகராக இருந்த மதுரைப்பிள்ளை கூட்டிய பெரும்மன்றத்தில் ‘நாவலர்’ பட்டம் வழங்கப் பெற்றார். பெரும்புலவர் சோழவந்தான் அரசஞ்சண்முகனார் இவர்தம் இலக்கண, இலக்கியப் புலமையைப் போற்றி எழுதினார். ‘புலவர் குலமணி’ என்று பாராட்டப் பெற்றார்.

     இவர் எழுதிய நூல்கள் 24. அவற்றுள் ‘பொருந்த இலக்கணம்’ முதலிய இலக்கண நூல்களும், இலக்கியங்களும், உரைகளும், உரை நடை ஆக்க நூல்களும், சமய நூல்களாகச் சிற்றிலக்கியங்களும் உள்ளன.

     ‘புலவராற்றுப்படை’ என்னும் அவர்தம் நூல் சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் ஒரு பாட்டு போன்ற சிறப்புடையது. இவர் எழுதிய ‘அரபுத்-தமிழ் அகராதி’ குறில்லத்தக்க தமிழ்ப்பணியாகும்.

     நாகூர் முத்துப் புலவர் இயல்பான ஓட்டத்தில் செய்யுள் இயற்றும் புலமையாளர். தமிழ்த்திரு பாண்டித்துரை தேவர்பால் பேரன்பு பூண்டு அவரால் போற்றப் பெற்றவர். அவர் மேல் 51 பாடல்களும் பல தனிப் பாடல்களும் பாடியுள்ளார்.

கோவை இளஞ்சேரன் (‘நாகப்பட்டினம்’ எனும் வரலாற்று நூலிலிருந்து)

2 கருத்துகள்:

புல்லாங்குழல் சொன்னது…

நல்ல இடுகை. கோவை இளஞ்சேரனின் மாணவன் நான். எனக்கு மிகவும் பிடித்த தமிழாசிரியர் அவர்.

தூயவனின் அடிமை சொன்னது…

ஒ.நூருல் அமீன் கூறியது...

வாங்க சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி